August 14
கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து சுமார் 1.40இலட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர்வெளியேற்ற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் நீர்வரத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்ததாவது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தின் கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து சுமார் 1.40 இலட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வர வாய்ப்பு உள்ளது.
இதனை முன்னிட்டு மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வர இருப்பதால் அவற்றை அப்படியே வெளியேற்ற வாய்ப்பு உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (14.08.2018) மாலை 4.00 மணி நிலவரப்படி 120.320 அடியாக (93.982 டி.எம்.சி) உள்ளது. எனவே, மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வர உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும், நேரிடையாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்து குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24ஒ7 தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்.1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற்றும் காவேரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்களோ, சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும், விவசாயிகள் நீர்நிலைகளை கடக்கும் போது தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டுமெனவும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தெரிவித்துள்ளார்.